அமுதங் காணீரோ
தீம்புனல் தேக்கி நிறுத்தி
திவ்யம் பல செய்யாழி
அலை கொண்டுவாரும்
அமுதங் காணீரோ

அலகில் அலகு கோர்த்து
அஞ்சதற்கேதுமின்றி
அருந்தும் புள்குருவி
அமுதங் காணீரோ

புவியில் புவி சேர்த்து
புடவி நெய்தெடுக்கும்
கண்காணா கடைசல்
அமுதங் காணீரோ

தாலில் தால் வைத்து
உயிர் ஒன்றித்திருக்கும்
உண்ணும் ஊண்ஈர
அமுதங் காணீரோ

காற்றோடு செவி சேர்த்து
தினைவன புள்ளினம்போல்
நுழையும் நுண்ரீங்காரங்கோடி
அமுதங் காணீரோ

எம் தடந்தேரும் எம்மோரே
அடி அடிக்கு
அமுதங் கண்டு குடித்து
நிறைநெஞ்சம் நடந்தாளீரோ

எடுத்தது எடுத்தாளீரோ
மடுத்தது மடுத்தாளீரோ

புள்ளினங்காள் புவியினங்காள்
கல்லினங்காள் களியுயிரினங்காள்
கண்விசும்பும் விண்விசும்பின் வெளியினங்காள்

பல்லாண்டு பல பல்லாண்டு
பாதஞ் சீர் வைத்து
மண்ணில் இருந்தருளீரோ

ஓதம் ஓடும் உடற்பாதம் நின்று
பார் நடத்தும் பாழ் 
அமுதம் பார்த்தருளீரோ