42
தனக்கேயான பாத்திரத்தில்
தன்னைத் தயாரித்துக் கொள்ளும்
தேநீருக்கு துணை நின்றேன்
பாத்திரம்
பொங்கி வழியும் முன்பே
நிறுத்தத்தான் வேண்டுமா நான் ?
43
உறுதுணை
என்பதுதான் என்ன?
உன்னோடு உண்டு
உன்னோடு நீராடி
உன்னோடு களித்து
உன்னோடு உயிர்த்து
உன்னோடு துயில்வதல்லவா?
அன்றி
அவரோடு இருந்த
நீதானா?
44
மரக்கம்பத்தின் மேலோய்ந்து
தன்னிரு சிறகு உலர்த்தும்
இப்பறவை
விண்ணேகும் வரை
நாம் உடனிருந்து கண்டோம்
ஆகாயத்து வான்கம்பம் சுமந்து
திரியும் அப்பறவையை
விண்ணகம் காயும் வேளை
நாம் எங்கிருந்தோம்?






